×

ஓபிஎஸ் ஒரு காலி பெருங்காய டப்பா…: சி.வி. சண்முகம் தாக்கு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து புதுச்சேரி அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அதிமுக அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம் எம்பி கலந்து கொண்டு பேசியதாவது: பாஜ அடிமை ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகின்றனர். புதுவை யூனியன் பிரதேசமாக இருப்பதால் அத்தியாவசிய திட்டங்களை கூட நிறைவேற்ற முடியவில்லை. எதற்கெடுத்தாலும் ஒன்றிய அரசின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. மாநிலம் வளர்ச்சி பெற, நிதி ஆதாரம் அதிகரிக்க புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை. புதுச்சேரியில் இருந்தும் கிடைக்கும் வரி வருவாய் அனைத்தும் ஒன்றிய பாஜ அரசுக்கு செல்கிறது. அந்த வரியில்தான் புதுவைக்கு ஒன்றிய அரசு பிச்சை போடுகிறது. மாநில அந்தஸ்து கிடைக்காவிட்டால், புதுவை மாநிலம் வளர்ச்சி அடையாது. 43 ஆண்டாக புதுச்சேரி எந்த வளர்ச்சியும் அடையவில்லை.

மீண்டும் ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தாலோ, புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வெற்றிபெற்றாலோ புதுவையின் யூனியன் பிரதேச அந்தஸ்து குறைந்துவிடும். முதல்வர் பதவியே இருக்காது. முதல்வர் ரங்கசாமி நகராட்சி மேயராகிவிடுவார். மாநில அரசுகளை ஒன்றிய பாஜ அரசு, நசுக்கி வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தை பாஜ சிதைக்கிறது. மாநில அந்தஸ்து பெற என்ன நடவடிக்கையை முதல்வர் ரங்கசாமி எடுத்தார்?. அவர் வாய் சவடால் விட்டு, புதுவை மக்களை ஏமாற்றி வருகிறார்.ஒன்றிய அரசு மனது வைத்திருந்தால் நிதிக்குழுவில், புதுச்சேரியை சேர்த்திருக்கலாம். நிதிக்காக ஒன்றிய அரசிடம் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘ஓபிஎஸ் சகாப்தம் முடிந்துவிட்டது, அவர் ஒரு காலி பெருங்காய டப்பா. அவரது பேச்சை காதில் வாங்க வேண்டியதில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்,’ என்றார்.

 

The post ஓபிஎஸ் ஒரு காலி பெருங்காய டப்பா…: சி.வி. சண்முகம் தாக்கு appeared first on Dinakaran.

Tags : C.V. Shanmugam ,Puducherry ,AIADMK ,Union government ,Villupuram ,BJP ,C.V. Shanmugam Taku ,
× RELATED காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி